பெங்களூரு : ஐபிஎல் தொடரின் 16வது சீசன் ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களுக்கு 100 சதவீதம் பொழுது போக்காக அமைந்துள்ளது. திரில்லர் படங்களை பார்ப்பது போல், ஒவ்வொரு மேட்சும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்கின்றன. போட்டி கிளைமாக்சை நெருங்கும் போது உங்களுடைய இதய துடிப்பை பல்ஸ் மீட்டர் வைத்து சோதித்தால் கூட நிச்சயம் 120க்கு மேல் இருக்கும்.
பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், விளையாடும் வீரர்களுக்கு எப்படி இருக்கும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக சில அணி வீரர்கள் விதியை மீறி செயல்படுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஆர்சிபி, லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் கூட இப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது.

கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது, ஹர்சல் பட்டேல் மான்கட் செய்யலாமா வேண்டாமா என ஒரு வினாடி யோசித்தார். ஆனால், Non striker முனையில் நின்ற ரவி பிஸ்னாய், கோட்டை விட்டு வெளியே நின்றார். அதன் பிறகு பந்தை தூக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார். எனினும் இதனை நடுவர் ஏற்று கொள்ளவில்லை.
அதன் பிறகு கடைசி பந்தை மீண்டும் வீச முயன்ற போது, அதனை எதிர்கொண்ட ஆவேஷ் கான் மிஸ் செய்தார். ஆனால், பேட்டில் படாமல் ரன் ஓடத் தொடங்கினார். அப்போது தான் ஆர்சிபி வீரர்கள் விதியை மீறி நடந்து கொண்டார்கள். ஆவேஷ் கான் ரன் ஓடுவதை தடுக்கும் விதமாக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்கிறேன் என்ற பெயரில், ஆவேஷ் கானை தடுத்தார்கள்.

ஆர்சிபியின் திட்டத்தை புரிந்து கொண்ட ஆவேஷ்கான், அவர்களையும் தள்ளி, அந்த ரன்னை நிறைவு செய்தார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கி ஏறிந்தார். இதனால் ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ஒரு வேளை ஆவேஷ் கான் அந்த ரன்னை நிறைவு செய்யாமல் போய் இருந்தால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும். ஆர்சிபி வீரர்களின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.