மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடப்பாண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. புதிய சீசன் நடைபெறுவதை ஒட்டி ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை பிசிசிஐ வழங்க உள்ளது.
எவ்வளவு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அணிகளிடம் பிசிசிஐ கருத்து கேட்டது. இதில் சில அணிகள் ஐந்து வீரர்கள் என்றும் சில அணிகள் எட்டு வீரர்கள் தக்க வைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை எவ்வளவு ஊதியத்தில் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து தற்போது ஆலோசித்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் என்று பிசிசிஐ ஒரு ஃபார்முலாவை வகுத்திருக்கிறது. அதாவது நான்கு வீரர்களை தக்கவைக்க விரும்பும் அணி முதல் வீரருக்கு பதினாறு கோடியும், இரண்டாவது வீரருக்கு 12 கோடியும், மூன்றாவது வீரருக்கு எட்டு கோடியும், நான்காவது வீரருக்கு 6 கோடியும் வழங்க வேண்டும் என்று விதி இருந்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா முதல் வீரராக தக்க வைக்கப்பட வேண்டும் என்றால் 16 கோடி ரூபாய் அவருக்கு வழங்க வேண்டும். இதுதான் தற்போது சிக்கலுக்கு வழி வகுத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா என்ற நான்கு தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
இதில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதினாறு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு பும்ராவுக்கு 12 கோடி ரூபாய் கொடுக்க முடியாது. இவர்களுக்கு 12 கோடி ரூபாய் கொடுத்தால் ரோகித் சர்மாவுக்கு எட்டு கோடி ரூபாய் தான் கொடுக்க வேண்டிய நிலை வரும். அது ரோகித் சர்மாவின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும்.
ஏற்கனவே கேப்டன் பதவியை எதிர்பார்த்து சூரிய குமார், பும்ரா ஆகியோர் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு 12 கோடி அல்லது எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டால் நிச்சயம் அவர்கள் மனதளவில் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் தங்களுக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறி மும்பை அணியின் ஸ்டார் வீரர்கள் வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.