அயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் கனவு நிறைவேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியில் பூஜை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு பின் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியா புதிய வரலாறு படைத்து கொண்டிருக்கிறது. தாமதமாக கோயில் கட்டியதற்காக ராமர் நம்மை மன்னிப்பார் என்று நம்புகிறேன். பல நூற்றாண்டுகளுக்கு பின் ராமர் திரும்பி வந்துள்ளார்.

இந்தியா இன்று தான் தீபாவளியை கொண்டாடுகிறது. சட்டப்படியே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நன்றி என்று தெரிவித்தார். இந்த விழாவில் தொழிலதிபர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் தற்போது விளையாடி வரும் இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே கலந்துகொண்டார். அதிகாலை மும்பையில் இருந்து அயோத்திக்கு வந்த சச்சின் டெண்டுல்கர், ராமர் கோயிலுக்கு வந்த போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் ராமர் கோயில் முன் அமைக்கப்பட்ட அரங்கில் சச்சின் டெண்டுல்கருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அவருக்கு அருகில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வந்திருப்பது ஸ்பெஷலான உணர்வினை அளிக்கிறது.
இதில் கலந்து கொள்ள சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாக கோடிக்கணக்கான இந்திய மக்களின் கனவு நிறைவேறியதாக பார்க்கிறேன். ராமரிடம் ஆசிர்வாதம் பெறுவதை கடந்து வேறு இதுவும் இந்திய மக்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார்.