மும்பை : ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக பல அணிகளும் தற்போது இறுதி கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய அணி கடந்த 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காயத்திலிருந்து குணமடைந்த பும்ரா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இதனால் இந்திய அணியின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் இன்று இந்திய அணி அயர்லாந்துடன் மூன்றாவது t20 போட்டியில் மோத இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில் இது சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பும்ரா விளையாட மாட்டார் என தெரிகிறது.
இந்திய அணியின் இரண்டாம் நிலை வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட இருக்கிறார். இதனால் அவருக்கு ஒரு பயிற்சி களமாக இருக்க அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ருத்ராஜ் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக பும்ரா இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சஞ்சு சாம்சனுக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் காரணமாக பும்ராவுக்கு பதில் ஆவேஸ் கான் இன்று விளையாட வாய்ப்பு இருக்கிறது.
எனினும் இது உறுதியான தகவல் இல்லை. ஆனால் ருதுராஜ் ஆசிய விளையாட்டு போட்டியில் கேப்டனாக இருப்பதால் அவர் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்டால் மட்டுமே அவருக்கு ஒரு அனுபவம் கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்றார்களோ அவர்களை வைத்து அயர்லாந்துக்கு எதிராக மூன்றாவது போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.