மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த மகிழ்ச்சியான செய்தி வந்து சேர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா இணைந்து இருக்கிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி அளித்திருக்கிறது.
இதை அடுத்து பும்ரா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் பயிற்சி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். இடையே நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் உடல் தகுதியை பெறுவாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
இந்த நிலையில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் பும்ரா பங்கேற்கவில்லை. தற்போது பிசிசிஐ மருத்துவ குழு அவருக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் இடம் பெறுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பும்ரா இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அவசரகதியில் அவரை விளையாட வைக்குமா? அல்லது இரண்டு, மூன்று போட்டிகள் வரை காத்திருந்து அவரை போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள அனுமதித்து பின்னர் பயன்படுத்துமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பும்ரா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றத்தை சந்தித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. எனவே பும்ராவின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவசியமாக உள்ளது.