லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா 83 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு பற்றி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டுப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பும்ரா இந்த இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு இடையில் என்ன நடந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, இந்திய அணியால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அதற்கு அடுத்த நாள் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆனால், இதில் பும்ராவின் பந்துவீச்சில் மட்டும் நான்கு கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. அதிலும் ஸ்லிப் ஃபீல்டராக நின்றிருந்த ஜெய்ஸ்வால் மட்டுமே மூன்று கேட்ச் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டார். மேலும், பும்ரா விக்கெட்டை வீழ்த்திய ஒரு பந்து நோ-பால் ஆனதால், அந்த விக்கெட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை.
இதைச் சுட்டிக்காட்டிய சச்சின் டெண்டுல்கர், பும்ரா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு வாழ்த்து கூறியதோடு, "ஒரு நோ-பால் மற்றும் மூன்று கேட்ச் வாய்ப்புகள் உங்களுக்கும் ஒன்பது விக்கெட்டுகளுக்கும் இடையில் இருக்கிறது" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, மூன்று கேட்ச் வாய்ப்புகள் சரியாக அமைந்திருந்தால், அந்தப் பந்து நோ-பால் ஆகாமல் இருந்திருந்தால், தற்போது பும்ரா ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார் என சச்சின் டெண்டுல்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்த ஐந்து விக்கெட் சாதனை, பும்ரா வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்தும் பத்தாவது ஐந்து விக்கெட் சாதனையாகும். மேலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் மட்டும் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. கே எல் ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.