மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 21 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதையை பற்றி பார்க்கலாம்.
2019ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பின், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை அணி ஏலத்தில் வாங்க நினைத்தது. ஆனால் ராஜஸ்தான் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வாங்குவதில் தீவிரமாக இருந்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடர்பு கொண்ட மும்பை அணி நிர்வாகம், "இம்முறை ஏலத்தில் எங்களால் வாங்க முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை வாங்கிவிடுமோம்" என்று உறுதியளித்தது.

ஆனால் இனி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எத்தனை கோடி கொடுத்தாலும், அவரை ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்குவே முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு வேர்விட்டு வளரும் மரம் போல் வேகமாக வளர்ந்து வருகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஒரு காலத்தில் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் விளையாடிய போது, வேறு மைதானத்திற்கு செல்லுமாறு விரட்டப்பட்டவர். ஒரு கட்டத்தில் ஆசாத் மைதானத்தில் ஒளிபரப்பட்ட ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக வேறு வழியில்லாமல் நண்பனுடன் மரத்தில் ஏறி நின்று பார்த்தவர்.
அப்போது அவரின் நண்பரிடம் ஜெய்ஸ்வால், "ஒருநாளும் நானும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்" என்று கூறியுள்ளார். மும்பையில் டென்ட் அமைத்து, பானி பூரி விற்று கிரிக்கெட் விளையாடுவதற்காகவே வாழ்க்கையில் போராடியவர். அதுமட்டுமல்லாமல் படிப்படியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய யு19 அணி வரை வந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. பயிர்சியாளர் சுரேந்திராவிடம் சென்று டாப் ஆர்டரில் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று போராடி இருக்கிறார்.
அதன்பின்னர் கிடைத்த முதல் வாய்ப்பில் ஜெய்ஸ்வால் செய்து காட்டியது தான் ஆச்சரியம். முதல் வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து, சதத்தை விளாசி தனது வருகையை அறிவித்துக் கொண்டார் ஜெய்ஸ்வால். அதன்பின்னர் தான் யு19 அணியில் ஜெய்ஸ்வாலுக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் இளம் வீரரான ஜெய்ஸ்வால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் மட்டுமல்லாமல், ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் இந்தியில் பதிலளித்திருந்தார் ஜெய்ஸ்வால். அதனால் இம்முறை ஒரு போட்டியில் ஹர்ஷா போக்ளே இந்தியில் கேள்வி கேட்க, அதற்கு உடனடியாக ஆங்கிலத்தில் பதிலளித்து ஆச்சரியம் கொடுத்தார். சில முறை தவறாக பேசி இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசுவதில் உறுதியாக இருந்ததே ஜெய்ஸ்வாலின் மன உறுதியை பிரதிபலிக்கிறது. எளிய குடும்பத்தில் பிறந்து இந்திய டெஸ்ட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்திருப்பதை ரசிகர்கள் பலரும் தங்களின் வெற்றியாகவே கொண்டாடி வருகிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புஜாராவின் இடத்தில் களமிறங்கும் ஜெய்ஸ்வால் மீது அதீத எதிர்பார்ப்புகள், வயதுக்கு மீறிய பொறுப்புகள் கொடுத்திருந்தாலும் அதனை அவர் சரியாக செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் சவாலை தேடி சென்று சாதித்த ஜெய்ஸ்வாலுக்கு, இம்முறை சவால் தேடி வந்துள்ளது. அதனை ஜெய்ஸ்வால் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.