
லீக் போட்டி
ஞாயிற்றுக்கிழமையான நேற்று டபுள் ஹெட்டர்ஸ் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வெற்றியின் அருகில் வந்த பஞ்சாப் அணி இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியில் எந்த வீரரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

உம்ரான் மாலிக்
அதைத்தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கில் 57 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் நிதிஷ் ரானா மற்றும் தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே அந்த அணி 19.4 ஓவர்களில் 119 ரன்களை எடுத்து ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அந்த அணியில் அறிமுக பவுலராக களமிறங்கிய உம்ரான் மாலிக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர், விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் கூட மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கேப்டன் பாராட்டு
இருந்தாலும், அவர் தொடர்ந்து 140 கிமீ வேகத்திலேயே பந்து வீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். ஐபிஎல் தொடரில் சர்வதேச அளவில் தலைசிறந்த பவுலர்கள் கூட ஸ்லோ பந்துகளை வீசும் நிலையில், உம்ரான் மாலிக் தனது பந்து வீசும் திறனில் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து 140 கிமீ வேகத்திலேயே பந்துகளை வீசி வந்தார். அதிலும் குறிப்பாக இரண்டு பந்துகளில் 150 கிலோமீட்டர் வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் வீசி அசத்தினார். வரும் போட்டிகளிலும் உம்ரான் மாலிக் சீரான இதே வேகத்தில் வீசி வந்தால், வெகு விரைவில் இந்திய அணியில் அவருக்கான இடம் உறுதி செய்யப்படும்.

சிறந்த பவுலர்
உம்ரான் மாலிக் குறித்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், "நெட் பயிற்சியின் போது நாங்கள் உம்ரான் மாலிக் பந்துகளை எதிர்கொண்டோம். அவரிடம் நல்ல வேகம் உள்ளது, வரும் காலத்தில் அவர் சிறந்த பவுலராக வருவார். உம்ரான் மாலிக் மிக வேகமாக அதே சமயம் கண்ட்ரோலாக பந்துகளை வீசுகிறார். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது" என்று பாராட்டிப் பேசினார்.

யார் இந்த உம்ரான் மாலிக்
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது வீரரான உம்ரான் மாலிக் உள்ளூர் போட்டிகளிலும் அதிகம் விளையாடியவர் இல்லை. இவர் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் சரி, டி 20 போட்டிகளிலும் சரி இந்த ஆண்டு தான் அறிமுகமானர். கடந்த ஜனவரி மாதம் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் அட்டகாசமான பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல ஒரே ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் விளையாடியுள்ள அவர், அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 98 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

தோல்விக்கு என்ன காரணம்
நேற்றைய போட்டியில் அடைந்த படுதோல்வி குறித்து வில்லியம்சன் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இல்லை. எனவே பவுலர்களை குறை சொல்ல முடியாது. நாங்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறோம். ஆனாலும், இதுவரை அது பலன் தரவில்லை. கடைசி 3 - 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 150 ரன்களை குவிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால் அதை எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. எங்கள் அணியில் உள்ள தவறுகளை அடையாளம் கண்டு அதைச் சரி செய்யும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்" என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











