கலக்கிய பவுலர்கள்.. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்.. காப்பாற்றிய கேஎல் ராகுல்.. தொடரை வென்றது இந்தியா
கொல்கத்தா : இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றது. இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் கேஎல் ராகுல் தனி ஆளாக நின்று வெற்றிக்கு வித்திட்டார்.
இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த பந்துவீச்சாளர்களும் கலக்கிய நிலையில், பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். இலங்கை அணி மட்டும் கூடுதலாக ஒரு 50 ரன்கள் அடித்திருந்தால இந்தியா தோல்வியை கூட அடைந்திருக்கலாம்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியிலிருந்து நிசாங்கா நீக்கப்பட்டு, அறிமுக வீரராக நுவானிந்து பெர்னான்டோ சேர்க்கப்பட்டார்

சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்தல்
தொடக்க வீரர் அவிஸ்கா பெர்னான்டோ, 20 ரன்களில் போல்ட் ஆனார். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசேல் மெண்டிஸ், நுவானிந்து 73 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, குல்தீப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் குசேல் மெண்டிஸ் 34 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனார். இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் தனது 2வது பந்திலேயே தனஞ்செய்ய டி சில்வாவை போல்ட் ஆக்கினார். இதன் காரணமாக மூன்று பந்து இடைவெளியில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

சுருண்ட இலங்கை அணி
அறிமுக வீரராக களமிறங்கிய நுவானிந்து அரைசதம் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அசலங்காவும் குல்தீப்பிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க. ஷனாகா போல்ட் ஆனார். இதனையடுத்து அதிரடியாக விளையாடிய ஹசரங்கா, கருணரத்னே விக்கெட்டை உம்ரான் மாலிக் வீழ்த்தினார். இறுதியில் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி 39.4 வது ஓவரில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 30 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி விடும். இது ரோகித் சர்மாவிற்கே பத்தாதே டா என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் பாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோகித் சர்மா 17 ரன்களும், சுப்மான் கில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சரிவிலிருந்து மீட்பு
ஹாட்ரிக் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களில் போல்ட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 86 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஹர்திக் 36 ரன்களில் வெளியேற மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இந்தியா வெற்றி
எனினும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடி 21 ரன்கள் சேர்த்து அவரும் வெளியேறினார். எனினும் கேஎல் ராகுல் நங்கூரம் போட்டு ஆடுகளத்தில் நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 103 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications