இந்திய அணியிலிருந்து ஜடேஜாவை நீக்குவது முட்டாள்தனம்.. ஸ்ரீகாந்த் கருத்து
மும்பை: 2027 ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவதற்கு அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 37 வயதான ஜடேஜா ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ஆண்டில் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை, மேலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். வயது ஒரு தடையாக இருப்பதோடு, அக்சர் படேல் மற்றும் புதியவரான ஹர்ஷ் துபே போன்ற பிற இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களும் போட்டியில் இருப்பதால், 2027 உலகக் கோப்பைக்கான ஜடேஜாவின் தேர்வு இன்னும் உறுதியாகவில்லை.

இந்த மெகா தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது: "ஜடேஜாவை இப்போதே நிராகரிக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். நிதிஷ் குமார் ரெட்டி வளர்ந்து வரும் ஒரு ஆல்-ரவுண்டர். எனவே, ஹர்திக் பாண்டியா திரும்பியதும், அவருக்கும் நிதிஷுக்கும் இடையில் ஒருவர் மட்டுமே விளையாட முடியும்.
மற்றொரு ஆல்-ரவுண்டராக ஜடேஜா தான் இருக்க வேண்டும். ஆனால் ஜடேஜாவும் சிறப்பாக விளையாடத் தொடங்க வேண்டும். தற்போதைக்கு அவர் தனது உச்சகட்ட ஃபார்மில் இல்லை என்றாலும், அவரை இப்போதே ஓரங்கட்டுவது முட்டாள்தனமாக இருக்கும்." சமீபத்திய தடுமாற்றங்களுக்கு மத்தியிலும், கடந்த ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு ஜடேஜா முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் இந்த உலககோப்பை தொடர் நடைபெறும்போது, ரோகித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும்.
இருப்பினும், மற்ற இரு கிரிக்கெட் வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தின் ஃபார்ம் மிகச்சிறப்பாகவே உள்ளது. அவர் தனது கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 47-க்கும் அதிகமான சராசரியைக் கொண்டுள்ளார்.இதுபற்றி பேசிய ஸ்ரீகாந்த் "ரோஹித்தின் தேர்வு அவரது ஃபார்மைப் பொறுத்தது. அவர் தொடர்ந்து ரன்கள் குவித்து வந்தால் என்ன பிரச்சனை?
சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். அவர் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறார் மற்றும் பந்தை நேர்த்தியாக எதிர்கொள்கிறார். எனவே இப்போதே நாம் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாது. அடுத்த சில மாதங்கள் சோதனை காலமாகும். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது மார்ச் மாதத்திற்குள், 2027 உலகக் கோப்பைக்கான 20 வீரர்கள் அடங்கிய பட்டியலை நாம் இறுதி செய்ய வேண்டும்" என்றார்.
இருப்பினும், ரோஹித்தின் சமீபத்திய ஒருநாள் ஃபார்ம் சற்று கவலையளிப்பதாக உள்ளது. அவரது கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் ஐந்து முறை 30 ரன்களுக்கும் குறைவாகவே ஆட்டமிழந்துள்ளார். தர்மசாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் அவர் 16 ரன்களில் ரன் அவுட் ஆனார்.


Click it and Unblock the Notifications

