
அணியில் திடீர் மாற்றம்
இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தற்போது திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து 2வது விக்கெட் கீப்பராக விருதிமான் சாஹா தேர்வாகியிருந்தார். இந்நிலையில் 3வது விக்கெட் கீப்பராக தற்போது கே.எஸ். பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய சாஹா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் தான் கொரோனா நெகட்டீவ் ஆனது. எனினும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக முழு உடற்தகுதியுடன் இருப்பாரா என்ற கேள்வி உள்ளது.

மாற்று வீரர்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக ஜூன் 2ம் தேதி புறப்படும் இந்திய அணி செப்.14ம் தேதி வரை அங்கேயே முகாமிட உள்ளது. கிட்டத்தட்ட 3 மாத நீண்ட தொடர் என்பதால் சாஹாவின் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க பிசிசிஐ விரும்பவில்லை. அதன்காரணமாகவே சாஹாவுக்கு மாற்று வீரராக கே.எஸ்.பாரத் உடன் அழைத்துச்செல்லப்படுகிறார். அவர் விரைவில் மும்பையில் உள்ள பிசிசிஐ-ன் பயோ பபுளில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த பாரத்
27 வயதாகும் கே.எஸ். பாரத் ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவருக்கு உள்ளூர் போட்டிகள் மற்றும் முதல்-தர கிரிக்கெட்டில் அதிக வருடம் விளையாடிய அனுபவம் உண்டு. இதுவரை 78 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,283 ரன்களை அடித்துள்ளார். 123 இன்னிங்சில் 9 சதங்கள், 23 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











