புனே: இந்தாண்டு ஐபிஎல் சீசன் துவங்கி, முதல் இரண்டு வாரங்களின் முடிவில், இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் கண்டிப்பாக முன்னேறி விடும் என்றுதான் அனைவரும் நம்பினர். ஆனால், அதன்பிறகு நிலைமையே தலைகீழாக மாறி, மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பிளே ஆப் சுற்றை நெருங்கிவிட்டது. இன்னும் நான்கே ஆட்டங்கள்தான், சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்த நிலையில், நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் பஞ்சாப் தோல்வியடைந்தது. கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்து பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா என்று பஞ்சாப் எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை.
அதன் மூலம் இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 8ல் தோல்வி என, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்தது பஞ்சாப்.
சீசனின் துவக்கத்தில் தான் விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வென்றது பஞ்சாப். அதன்பிறகு நிலைமையே தலைகீழானது. கடைசி 8 ஆட்டங்களில் 7ல் தோல்வி அடைந்து, பரிதாபமாக வெளியேறியது.
ஆனால், இது ஒன்றும் பஞ்சாபுக்கு புதிதல்ல, இதுவரை நடந்துள்ள 11 சீசன்களில், 9 சீசன்களில் லீக் சுற்றிலேயே வெளியேறி, அதிக முறை லீக் சுற்றிலேயெ வெளியேறிய சாதனையை பஞ்சாப் புரிந்துள்ளது.
2008ல் அரை இறுதி நுழைந்தது. 2009ல் 5வது இடம், 2010ல் 8வது இடம், 2011ல் 5வது இடம், 2012ல் 6வது இடம், 2013ல் 6வது இடம் 2014-ல் பைனல்ஸ், 2015ல் 8வது இடம், 2016ல் 8வது இடம், 2017ல் 5வது இடம், 2018 - 7வது இடம் பிடித்துள்ளது.