சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி அசத்தினார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப் பரீட்சை நடத்தினர்.
இதில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 199 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்கள் எடுத்தனர். இதில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால் அதற்கு ஏற்றார் போல் விளையாடாமல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இன்னும் சொல்லப்போனால் தொடக்க வீரர் ரோகித் சர்மா, இசான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று வீரர்களுமே டக்அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை அடுத்து விராட் கோலியும், கே எல் ராகுலும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். இதில் விராட் கோலி 75 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். மேலும் இந்த இன்னிங்ஸில் விராட் கோலி ஒரு மகத்தான சாதனையை படைத்தார்.
அதன்படி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிவேகமாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 11 ஆயிரம் ரன்களைத் தொட்ட முதல் இந்திய வீரர் என்ற ரெக்கார்டும் விராட் கோலிக்கு சொந்தமானது.
மேலும் ஐசிசி உலகக் கோப்பையில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் சேர்த்து தொடக்க வீரராக இல்லாமல் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலிக்கு கிடைத்தது.ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி படைத்திருக்கிறார். சச்சின் ஐசிசி தொடர்களில் 2719 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில் அதனை தற்போது விராட் கோலி முறியடித்திருக்கிறார்.