கலிஃபோர்னியா: அமெரிக்காவில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைத்து ரோகித் சர்மா பேசிய பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. இதனால் டி20 போட்டிகளுக்கான பிரத்யேக அணியை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்தது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி உருவாக்கப்பட்டு, போட்டிகளில் விளையாடி வருகிறது.

இது 2007 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஏற்கனவே செயல்படுத்திய திட்டம் தான். எப்படி 2007 டி20 உலகக்கோப்பையில் இருந்து சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட் விலகி கொண்ட பின், தோனி தலைமையில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்களோ, அதேபோல் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை.
ஹர்திக் பாண்டியா தலைமையில் இளைஞர்களை கொண்ட அணியை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு பின் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இருந்து வருவதால், சீனியர் வீரர்களை அந்த இரு வகையான போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதனால் டி20 அணிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் மீண்டும் திரும்ப வாய்ப்பே இல்லை என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இதனால் அமெரிக்காவில் கிரிக்கெட் தொடர்பான முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்ட நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது கிரிக்கெட் அகாடமியான கிரிக் கிங்டம் அகாடமி கிளையை கலிஃபோர்னியாவில் திறந்து வைத்துள்ளார்.
இந்தியாவின் ஏராளமான நகரங்களில் கிரிக்கிங்டம் அகாடமி செயல்பட்டு வரும் நிலையில், தற்போது வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தனது அகாடமியின் கிளையை திறந்து வைத்த ரோகித் சர்மாவுக்கு அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா பேசுகையில், கிரிக்கிங்டம் அகாடமி தொடங்கப்பட்டதற்கு கிரிக்கெட்டை அமெரிக்காவில் வளர்க்க வேண்டும் என்பதும், அடிப்படைகளை கிரிக்கெட் வீரர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்பதுமே நோக்கம் என்று கூறியுள்ளார். அதேபோல், 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அதனால் நிச்சயம் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட அமெரிக்கா வருவேன் என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ரோகித் சர்மாவின் பதிலால் அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், உலகக்கோப்பைத் தொடருக்கு பின் அவர் இந்திய அணியில் இருப்பதே கடினம் என்று விமர்சித்து வருகின்றனர்.