மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே கவுதம் கம்பீர், விராட் கோலியும் மோதிக்கொண்டதால் இரு வீரர்களின் ரசிகர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கவுதம் கம்பிர் தேவையில்லாமல் தோனி ரசிகர்களை வம்புக்கு இழுத்திருக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ அணி ஒன்பது ஓவர் முடிவில் 63 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து சிறப்பாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மும்பை அணி வெற்றியின் அருகே வந்துவிட்டது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தான் அடிக்க வேண்டும் என இருந்தது.
இதில் கடைசி ஓவர் வீசிய மோசின் கான் ஐந்து ரன்களை மட்டுமே வழங்கினார். இதன் மூலம் மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோவின் வெற்றிக்கு மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மோசின் காணும் தான் காரணம் என ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல் தோனி ரசிகர்களை வம்பு இழுக்கும் வகையில் கவுதம் கம்பீர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். பொதுவாக தோனியை அனைவரும் எம்.எஸ். என்று அழைப்பார்கள். அவர் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் இருந்தே சக வீரர்கள் எம். எஸ். என்று அழைப்பதுண்டு. இதனை குறிக்கும் வகையில் கவுதம் கம்பீர் போட்டுள்ள பதிவில் இரண்டு எம். எஸ், மார்க்கஸ் மற்றும் மோசின்.. பிரமிக்க வைக்கும் ஆட்டத்திறன் என பதிவிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்ததும் தோனி ரசிகர்கள் கடுப்பாகினர். எப்போதுமே ஒரே எம் எஸ்., அது தோனி மட்டும் தான் என்று அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள். கம்பீரின் இந்த பின்னோட்டத்திற்கு கீழ் தோனி ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து விட்டார்கள். தோனியை வம்பு இழுக்கவில்லை என்றால் கம்பிருக்கு தூக்கமே வராது என்றும் ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கிறார்கள்.