லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டை வீழ்த்தி விட்டு சீண்டும் வகையில் அதை கொண்டாடினார். இதை அடுத்து அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய போட்டியிலும் அவர் இதே போன்ற செயலை செய்து 25 சதவீதம் அபராதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறை தண்டனை பெற்ற பிறகும் தனது திமிரான செயலை திருத்திக் கொள்ளாமல் அவர் மீண்டும் அதே போல செய்து பிசிசிஐ-யின் கோபப்பார்வைக்கு ஆளாகி இருக்கிறார்.

நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்த போது மூன்றாம் வரிசையில் இறங்கிய நமன் திர் அதிரடி ஆட்டம் ஆடி ரன் சேர்த்து வந்தார். அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த நிலையில் திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
அவரது விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஒரு புத்தகத்தை எடுத்து அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டதாக குறித்து வைப்பது போல சைகை செய்தார் திக்வேஷ் ரதி. இதற்கு முந்தைய போட்டியிலும் இதே போன்ற செய்கையை அவர் செய்திருந்தார்.
அப்போது தன்னுடன் டெல்லி டி20 அணியில் ஆடியவரான ப்ரியன்ஷ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவ்வாறு செய்தார். அப்போது ப்ரியன்ஷ் ஆர்யாவின் முகத்துக்கு நேரே சென்று அதை செய்திருந்தார் திக்வேஷ். அதனால் அவருக்கு முதல் நிலை குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது அவர் நமன் திர் அருகே செல்லாமல் தூரமாக நின்று அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும், இது எதிரணி பேட்ஸ்மேனை சீண்டுவது தான் என மீண்டும் முதல் நிலை குற்றமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே தவறை அவர் இரண்டு முறை செய்ததால் இந்த முறை அவருக்கு 50 சதவீதம் போட்டி சம்பளத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய போட்டியில் செய்த தவறுக்காகவும் ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு இருந்தது. ஒரு வீரர் தொடர்ந்து நான்கு முதல் ஏழு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு ஒரு ஐபிஎல் போட்டியில் ஆடத் தடை விதிக்கப்படும்.
எனவே, இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஏதேனும் தவறு செய்தால். அதிக டீமெரிட் புள்ளிகளை பெற்று திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆடத் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது கடைசி நேரத்தில் சொதப்பியது. இதை அடுத்து 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.