மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பலமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிக முறை வீழ்த்தியிருக்கும் அணி என்றால் அது பஞ்சாப் தான்.
இதனால் இரு அணிகள் மோதும் போது களத்திலும் சரி களத்திற்கு வெளியில் சரி எப்போதும் கேலி கிண்டல்கள் நிலவும். கடந்த முறை மோதிய போது கூட வான்கடேவில் மும்பையை பஞ்சாப் அணி வீழ்த்தியது.

அப்போது ஆர்ஸ்தீப் சிங் வீசிய பந்தில் ஸ்டம்ப் உடைந்தது. இதனை கிண்டல் செய்யும் விதமாக மும்பை காவல்துறையை டேக் செய்து பஞ்சாப் அணி கிண்டல் செய்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித் சர்மா டக்அவுட் ஆனார். இதனை கேலி செய்த பஞ்சாப் அணி ட்விட்டர் பக்கத்தில் ரோகித் சர்மாவை அவமதிக்கும் வகையில் ஆர் ஓ ஜீரோ என பதிவிட்டு கேலியாக சிரிக்கும் ஸ்மைலியை போட்டு இருந்தார்கள்.
இதனால் கடுப்பான மும்பை அணி நிர்வாகம் தங்களது பக்கத்தில் நேரடியாக பஞ்சாப் அணியின் டிவிட்டிற்கு பதிலளித்தது. இதில் ரோகித் சர்மா ஆறு முறை கோப்பையை வென்றிருப்பதாகவும், பஞ்சாப் அணி இரண்டு முறை பெயர் மாற்றி வந்தும் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்றும் ஸ்மைலி மூலம் போட்டு பதிலடி கொடுத்தனர்.

இதற்கு கீழே சி எஸ் கே அட்மினும் சென்று என்னடா பேசிட்டு இருக்கும்போதே இப்படி மரியாதை இல்லமா பேசிட்ட வடிவேலு காமெடி போட்டு கிண்டல் செய்தனர். இரு துருவங்களாக இருக்கும் சிஎஸ்கேவும் மும்பை அணியும் ரோஹித் சர்மாவை கிண்டல் செய்ததற்காக ஒன்றிணைந்து பதிவிட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பஞ்சாப் அணி தங்களுடைய டிவிட்டை டெலிட் செய்து விட்டு ஓடி விட்டனர்.
இதை அடுத்து போட்டி முடிந்ததும் மும்பை அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட டிவிட்டில் காவல்துறை அதிகாரிகளே உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். இங்கு வெறும் கிரிக்கெட் போட்டி தான் நடைபெற்றது. ஒரு அணி தோற்றுவிட்டது. வேறு எதுவும் இங்கு நடைபெறவில்லை. எங்களை காப்பதற்கு நன்றி என பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.