மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் ஒருபுறம் பும்ரா மறுபுறம் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் பந்து வீசினால் எதிரணி சின்னா பின்னம் ஆகிவிடும் என்று மும்பை ரசிகர்கள் கனவு கண்டனர்.
ஆனால் அவர்கள் கனவு கொஞ்சம் கூட நினைவாகவில்லை. ஜோப்ரா ஆச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். மேலும் பும்ரா நடப்பு சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தாலும் அவருக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் வரை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகி மீண்டும் ஒரு வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்த தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக திட்டி உள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மை என்னவென்று தெரியாமல் என்னை பற்றியும், என் அனுமதி இல்லாமலும் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இது சுத்த பைத்தியக்காரத்தனம். இந்த செய்தியை வெளியிட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.

ஏற்கனவே ஒரு வீரருக்கு காயம் அடைந்த தருணம் கவலையும் சிக்கல்களையும் கொடுக்கக்கூடிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் கூட உங்களுடைய சொந்த நலனுக்காக என்னை பயன்படுத்திக் கொள்வது கேவலமான விஷயம். எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.
உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள் என்று ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். இதனால் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? இல்லையா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.