மும்பை: மும்பை அணியால் ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஜடேஜா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் இந்த கேட்ச் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் ரஹானே ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிசாண்டா மகாளாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை. எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மும்பை அணி சார்பாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அதிரடியாக ரோகித் சர்மா பவுண்டரி அடித்து தொடங்கினார்.

அதேபோல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து கம்பீரமாக நின்றிருந்த ரோகித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே வீசிய அற்புதமான பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் பின்னர் மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் சேர்த்து விளையாடியது. பின்னர் தோனி தனது ஆயுதமான சாண்ட்னர் மற்றும் ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதற்கு பலனாக இஷான் கிஷன் 32 ரன்களிலும், தோனி ரிவ்யூ சிஸ்டத்தால் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் மும்பை அணியை ரூ.17.50 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கிய கேமரூன் கிரீன் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில், ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியுள்ளது. ஜடேஜா கேட்ச் பிடித்தார் என்பதை விடவும், பந்துதான் ஜடேஜாவை பிடித்தது என்றும் சொல்லலாம்.