மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் 3லும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மும்பை அணி நிர்வாகம் மும்பை அணி வீரர்கள் அனைவரையும் குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு விடுமுறைக்கு அனுப்பி உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி இன்று களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். வான்கடே மைதானம் சேஸிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிச்சர்ட்சன் மற்றும் இளம் வீரர் குமார் குசாக்ரா ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மும்பை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் நமன் திர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பிரெவிஸ் மற்றும் மபாகா நீக்கப்பட்டு ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் நபி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மும்பை அணியின் வலிமை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
டாஸின் போதி டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்ய விரும்புகிறோம். வான்கடே என்ன இலக்கு நிர்ணயித்தாலும் சேஸ் செய்ய முடியும். நாங்கள் அணியாக ஒன்றாக இணைந்துள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் ரசித்து விளையாடுகிறேன். பவுலிங்கில் கொஞ்சம் எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது. அதற்காக சில மாற்றங்கள் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
பின்னர் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே விரும்பினோம். ஆனாலும் முதல் பேட்டிங் ஆடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் பனிப்பொழிவு இருக்காது. ஆனாலும் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு பவுலர்களால் ஸ்விங் செய்வதில் பிரச்சனை இருக்கும். எங்களை நாங்களே அழுத்தம் செய்ய விரும்பவில்லை. ஒரு போட்டியில் வென்றாலே, அடுத்தடுத்து வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.