மும்பை: குஜராத் அணியின் ரஷித் கான், ஒரே ஓவரில் சிறப்பாக ஆடி கொண்டிருந்த ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் அணி பக்கம் திருப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் மும்பை அணியின் பெரும்பாலான வெற்றிகள் சேஸிங்கில் வந்திருப்பதால், இந்தப் போட்டியில் மும்பை அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேபோல் கடந்த 5 போட்டிகளில் 12 ரன்கள் மட்டுமே விளாசியிருந்த ரோகித் சர்மா, ஃபார்முக்கு வருவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில் மும்பை அணி சார்பாக தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. மோகித் சர்மா வீசிய 2வது ஓவரிலேயே ரோகித் சர்மா இரு பவுண்டரி, ஒரு சிக்சரை அபாரமாக ஆடி அசத்தினார். தொடர்ந்து ஷமி வீசிய 3வது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் சிக்சர்களை விளாச, அந்த ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. இருவரின் அதிரடி காரணமாக 5வது ஓவரிலேயே ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
ஆனால் அவரது ஓவரில் பவுண்டரி அடிக்கப்பட, தொடர்ந்து வீசிய நூர் அஹ்மத் ஓவரிலும் இஷான் கிஷன் இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்தது. இதையடுத்து உடனடியாக டைம் அவுட் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் விக்கெட்டை வீழ்த்துவதற்காக ரஷித் கான் பந்துவீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரை ஸ்லிப் திசையில் ஃபீல்டர் வைத்து ரஷித் கான் பந்துவீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா ஸ்லிப் திசையில் நின்ற ராகுல் டிவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5வது பந்தில் இஷான் கிஷன் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழந்ததால், மும்பை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் மும்பை அணி 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. நன்றாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை ஒரே ஓவரில் ரஷித் கான் குஜராத் அணி பக்கம் திருப்பியுள்ளார். இதனால் மும்பை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.