அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணி முன்னேறுவதற்கு மும்பை அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி 57 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த 18 போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. இதனால் பஞ்சாப் அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தெர்வு செய்தார். பின்னர் மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில், மும்பை அணிக்காக ரோஹித் சர்மா - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக திலக் வர்மா வந்து அட்டாக்கை தொடங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் ஸ்கோரை 6 ஓவர்களில் 65 ரன்களாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோவ் தேவையில்லாத ஷாட்டுக்கு முயற்சித்து 38 ரன்களில் வெளியேறினார். பின் திலக் - சூர்யகுமார் கூட்டணி இணைந்தது.
இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ள, மும்பை அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 102 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரியை மும்பை அணி விளாசி தள்ள, ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்து சென்றது. இதனால் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியா - நமன் திர் கூட்டணி இணைந்தது. அதற்கேற்ப 17வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட, ஓமர்சாய் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த போதும், ஹர்திக் பாண்டியா சிக்ஸ் அடிக்க முயற்சித்து 15 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது.
கடைசி ஓவரை வீச ஓமர்சாய் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி பறக்க, 3வது பந்தில் நமன் திர் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணி இதுவரை 200 ரன்களுக்கு மேல் குவித்த 18 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.