
முக்கிய ஆட்டம்
மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளுமே இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும் ரன் ரேட் அடிப்படையில் 6வது மற்றும் 7வது இடங்களை பிடித்துள்ளன. எனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே உள்ளன. இதனால் இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிசிசிஐ-க்கு தலைவலி
இந்நிலையில் இந்த போட்டியை காண ரசிகர்களை விட பிசிசிஐ அதிக ஆர்வமாக உள்ளது. ஏனென்றால் இந்த போட்டி தான் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியையே மாற்றப்போகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வீரர்கள் ஐபிஎல்-ல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அவர்களின் ஃபார்ம் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. இதனால் இந்திய அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

இந்திய அணியில் மாற்றம்?
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி செய்யப்பட்ட பட்டியலை ஐசிசி-யிடம் வழங்குவதற்கு வரும் அக்டோபர் 10ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே அதற்குள்ளாக என்ன மாற்றங்களை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம். அந்தவகையில் 4 மாற்றங்களை பிசிசிஐ செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான தீர்வு இன்று தான் எட்டப்படவுள்ளது.

மும்பை வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சஹார், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகிய 4 வீரர்கள் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்த 4 வீரர்களின் ஃபார்முமே மிக மோசமாக உள்ளது. அமீரகத்தில் நடந்த கடைசி 5 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 49 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இஷான் கிஷான் மோசமான ஃபார்ம் காரணமாக மும்பையின் ப்ளேயிங் 11ல் இருந்துக்கூட நீக்கப்பட்டுவிட்டார். சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் கடந்த 2 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதால் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

ஹர்திக்கின் நிலைமை
மும்பை அணியில் தற்போது இருக்கும் ஒரே ஒரு வீரர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே. ஆனால் அவரின் நிலைமையே மோசமாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. அதே போல பேட்டிங்கில் சொதப்பி வந்த பாண்ட்யா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தான் ஏதோ ஓரளவிற்கு ரன் அடித்துள்ளார். எனவே இவர்களின் ஆட்டத்தை பிசிசிஐ இன்று உற்று நோக்கவுள்ளது.

உற்று நோக்கும் கங்குலி
இந்த 4 வீரர்களும் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டால் பிசிசிஐ தலைவர் கங்குலியே நேரடியாக அவர்களை கண்காணிக்கவுள்ளார். அவர்களில் சொதப்பும் வீரர்களை நீக்கிவிட்டு உடனடியாக வேறு வீரர்களை இந்திய அணியில் சேர்க்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அதற்காக ஷிகர் தவான், யுவேந்திர சாஹல் உள்ளிட்ட வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











