லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி, தொடர்ந்து 3வது முறையாக தோல்வியை தழுவியது. இதனால், மும்பை அணியும் 16 புள்ளிகளுடன் சிக்கி கொண்ட சூழ்நிலை உருவானது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து லக்னோ அணியில், தீபக் ஹூடா 5 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டிகாக் 16 ரன்களில் வெளியேறினார். பிரேராக் மான்கட் டக் அவுட்டாகியும் வெளியேற, லக்னோ அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து களமிறங்கிய குர்னல் பாண்டியா 49 ரன்கள் எடுக்க, ஸ்டோனிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. லக்னோ ஆடுகளத்தில் வெற்றிக்கரமாக துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோரே 160 ரன்கள் தான். இதனால் மும்பை அணிக்கு கடும் சவால் காத்திருந்தது. ஆனால் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார்.
ரோகித் சர்மா 37 ரன்கள் எடுக்க, இஷான் கிஷன் 39 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க, முதல் விக்கெட்டுக்கு மும்பை அணி 9.4ஓவரில் 90 ரன்கள் குவித்து, நல்ல தொடக்கத்தை அளித்தது. சூர்யகுமார் 7 ரன்களில் வெளியேற, விஷ்ணு வினோத் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

நேலவ் வெத்ரா 16 ரன்களில் எடுக்க, கேமிரான் கிரீன் 4 ரன்கள் எடுத்தார் டிம் டேவிட் 19 பந்துகளில் 32 ரன்கள் சேர்க்க, மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணியால் அதிகபட்சமாக 16 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. மேலும் லக்னோவிடம் ஒரு வெற்றியை கூட மும்பை அணியால் பெற முடியவில்லை.