மும்பை: நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கொடுத்த லட்டு கேட்சை இந்திய அணியின் அனுபவ வீரர் முகமது ஷமி தவறவிட்ட நிலையில், அந்த தவறை அவரே மீண்டும் சரி செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் கூட்டணி களமிறங்கியது. இதில் கான்வே மற்றும் ரச்சின் இருவருமே 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதன்பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியசம்சன் - டேரில் மிட்செல் இருவரும் சேர்ந்தனர்.
முதல் சில ஓவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 124 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் நியூசிலாந்து அணி வீரர்கள் இருவருமே கியரை மாற்றினர். சிறப்பாக ஆடிய மிட்செல் 49 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இன்னொரு பக்கம் வில்லியம்சன் 58 பந்துகளில் அரைசதம் அடிக்க, நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 174 ரன்களை சேர்த்திருந்தது.
இந்த நிலையில் பும்ரா வீசிய 29வது ஓவரின் 5வது பந்தில் 52 ரன்களில் எடுத்திருந்த நிலையில், மிட் ஆஃப் திசையில் லட்டு கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆனால் அதனை முகமது ஷமி தவறவிட, வான்கடே மைதானமே மயான அமைதிக்கு சென்றது. இதனால் ரோகித் சர்மா என்ன செய்வதென தெரியாமல் சோகத்தை வெளிப்படுத்தினார். இதனால் 32 ஓவர்களில் நியூசிலாந்து அணி 219 ரன்களை சேர்த்திருந்தது.
இதன்பின் உடனடியாக முகமது ஷமியை அட்டாக்கில் கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அப்போது டேரில் மிட்செல் 85 பந்துகளில் சதமடிக்க, பின்னர் வந்த கேன் வில்லியம்சன் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் கேட்சை கோட்டைவிட்டு செய்த தவறை, முகமது ஷமி திருத்தினார். இதன் மூலம் இந்திய அணி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது.