அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் முகமது ஷமி முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதுவரை அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 9 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிஃபையர் இரண்டாவது போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. இந்த நிலையில் கடைசியாக அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் முதலில் பேட்டிங் செய்த அணியும், 2ல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு, பவர் பிளே ஓவர்களில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் முகமது ஷமியின் பவர் பிளே ஓவர்களில் இருந்து மும்பை அணி எப்படி தப்பிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் பவர் பிளேவில் மட்டும் 15 ஓவர்கள் வீசி 64 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஆனால் மும்பை அணிக்காக ஆடிய கடந்த போட்டியில் முகமது ஷமி 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் மும்பை அணி தரப்பில் ஷமியை டார்கெட் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா பந்துவீச வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் போட்டியில் ஜோஷ் லிட்டில் மீண்டும் அணிக்குள் திரும்ப அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் யாஷ் தயாள், தர்ஷன் நலக்கண்டே ஆகியோர் சிறப்பாக பந்துவீசினாலும் ஜோஷ் லிட்டில் மிடில் ஓவர்களில் எடுத்து கொடுக்கும் விக்கெட்டுகளை மற்ற வீரர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் இன்றையப் போட்டியில் ஷனகா நீக்கப்பட்டு ஜோஷ் லிட்டில் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவார் என்று பார்க்கப்படுகிறது.