மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் பல ஸ்டார் வீரர்கள் இளம் வயதிலிருந்து ரன்களை குவித்து அசத்தி வருகிறார்கள். ஆனால் சில வீரர்கள் 30 வயதை கடந்த பிறகு தான் புலி பாய்ச்சலில் ரன்களை குவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள். நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் 58வது சதத்தை அடித்து இருந்தார். இந்த நிலையில் 30 வயதுக்கு பிறகு அதிக சதம் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது முன்னாள் இலங்கை அணியின் சங்ககாரா. சங்ககாரா 30 வயதுக்கு பிறகு 43 சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மூன்று வீரர்கள் உள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 36 சதங்கள் அடித்து உள்ளனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
டெண்டுல்கர் 30 வயதுக்கு பிறகு 35 சதம் அடித்துள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இலங்கை வீரர் தில்ஷான் உள்ளார். தில்சான் 30 வயதுக்கு பிறகு 34 சதம் அடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா உள்ளார். அவர் 30 சதம் அடித்துள்ளார். ஆறாவது இடத்தில் முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே 29 சதங்களுடன் உள்ளார்.
ஏழாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 28 சதத்துடன் உள்ளார். இதே போன்று எட்டாவது இடத்தில் மூன்று வீரர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் காலிஸ், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திர்பால் ஆகியோர் தலா 27 சதங்கள் அடித்துள்ளனர்.
ஒன்பதாவது இடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கும், இந்திய அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் 26 சதங்கள் அடித்து உள்ளனர். பத்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் அசிம் அம்லா, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் 25 சதங்கள் அடித்துள்ளனர். 30 வயதுக்கு பிறகு 25 சதம் அடித்த 16வது வீரர் என்ற பெருமையை தற்போது ஜோ ரூட் பெற்றிருக்கிறார்.