சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திருக்கிறது. இதன் மூலம் 13 புள்ளிகளை பெற்றுள்ள சி எஸ் கே அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி, இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது. ஏனென்றால் புள்ளி பட்டியலில் பார்த்தோம் என்றால் பல அணிகளும் ஒரே புள்ளிகளுடன் இருந்தார்கள்.

தற்போது இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கூடுதலாக கிடைத்திருக்கிறது. இது எங்களுக்கு சாதகமான விஷயம் தான். இருப்பினும் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என்று சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால் ஒரு சில அணிகள் நாம் பெரும் புள்ளியையும் அவர்கள் பெறுவார்கள். இதனால் நாங்கள் விளையாட வேண்டிய அனைத்துப் போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. தற்போது வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. நான் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தேன். ஆனால் என் அணி நிர்வாகிகள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், முதலில் பந்து வீச சொன்னார்கள். அவர்கள் சொன்னதற்கு மரியாதை அளித்து இந்த முடிவை எடுத்தேன்.
ஏனென்றால் மழையால் ஆட்டமே பாதிக்கும் நிலை ஏற்படும்.பதிரானாவை பொறுத்தவரை அவருடைய பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமாகும். பேட்ஸ்மேன் அவருடைய பந்தை அடித்த ஆட முயற்சி செய்யும்போது அவர் வித்தியாசமான பந்தை வீசுவார். இதனால் அவரை கணித்து ஆடுவது மிகவும் கஷ்டம்.

என்னைக் கேட்டால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கூடாது. வெறும் ஐசிசி தொடர்களில் மட்டும்தான் பதிரானா விளையாட வேண்டும். மற்ற போட்டிகள் எல்லாம் அவருக்கு முடிந்தவரை ஓய்வு கொடுங்கள். அவருடைய பந்து வீச்சு முறையை மாற்றாதீர்கள். இதேபோன்று அவர் தொடர்ந்து பந்து வீச வேண்டும்.இதன் மூலம் அவரை முக்கியமான கட்டத்தில் பயன்படுத்த முடியும்.
அதற்கு அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இவர் கண்டிப்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார். முதலில் அவர் ஐபிஎல் விளையாடும் போது மிகவும் ஒல்லியாக இருந்தார். தற்போது நல்ல உடல் தேறி வந்திருக்கிறார். இலங்கை அணிக்காக அவர் நீண்ட காலம் விளையாடப் போகிறார் என தோனி பாராட்டியுள்ளார்.