
ஐபிஎல் 2021
இந்த 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கியது. பின்னர் கொரோனா 2ஆம் அலையால் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 3 மாத இடைவெளியில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அட்டகாசமான பார்மில் உள்ள சென்னை அணி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. 13ஆவது முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

தல தோனி
சிஎஸ்கே சூப்பர் பார்மில் இருந்தாலும் கூட தல தோனியின் பார்ம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. கேப்டன்சியில் தான் எப்போதும் தல தான் என்பதை தோனி நிரூபித்து வரும் போதிலும், பேட்டிங்கில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு தோனி ஓய்வு பெறப்போவதாக வதந்திகளும் யூகங்களும் பரவ தொடங்கின. 40 வயதான தோனி பேட்டிங்கில் திணறுவதாகவும் இந்தத் தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்புகள் அதிகம் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் பிராட் ஹாக் கூட தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தல தோனி ஐபிஎல் போட்டிகளில் தனது கடைசி போட்டி குறித்து முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஓய்வு எப்போது
தோனி, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினர். அதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்தது ஏன் ஒரு ரசிகர் தோனியிடம் கேட்டார், மேலும், தல தோனியின் கடைசி ஆட்டத்தை நேரில் பார்க்க முடியாமல் போனது குறித்த தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தினார். அதற்குப் பதிலளித்த தோனி, தனது ரசிகர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், ஐபிஎல் தொடரில் தனது கடைசி ஆட்டத்தைச் சென்னையில் விளையாட விரும்புவதாகவும் கூறினார்.

கடைசி போட்டி சென்னையில் தான்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எனது ஓய்வை அறிவிக்க இதை விடச் சிறந்த நாள் (ஆகஸ்ட் 15) இருக்க முடியாது. நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்னும் கூட நீங்கள் எனக்கு ஃபார்வேல் தரலாம். நான் எனது கடைசி ஆட்டத்தைச் சென்னையில் ஆடுவேன் என்று நம்புகிறேன். அங்கு தான் நான் எனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன் என நம்புகிறேன். அங்கு என்னால் அனைத்து ரசிகர்களையும் சந்திக்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிஎஸ்கே
இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தல தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்பதை உறுதி செய்துள்ளார். 40 வயதான அவர், சிஎஸ்கே அணியை 11வது முறையாக ஐபிஎல்லில் பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடந்த சீசனில் 7வது இடத்தை பிடித்த பிறகு, தோனி தலைமையிலான சிஎஸ்கே இந்த சீசனில் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்த முதல் அணி ஆனது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் முடிக்கும் வாய்ப்பு சென்னை அணிக்குக் கிடைக்கும். கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அடுத்தாண்டு இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் தல தோனி தனது இறுதிப் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று கூறி ஓய்வு குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக 2 அணிகள்
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளைச் சேர்க்கவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளின் எண்ணிக்கை 10ஆக உயரும். உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும் குஜராத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும் ஐபிஎல் தொடரில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 2 அணிகள் இணைந்துள்ளதால் ஐபிஎல் நடைபெறும் காலம் அதிகரிக்கும் என்றாலும் கூட, அது ஐபிஎல் தொடரை மேலும் சுவாரசியம் மிகுந்ததாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications