ரன் ஓடும்போது பவுலரை இடித்த டோணிக்கு அபராதம்.. தடையில் இருந்து தப்பினார்!
டாக்கா: ரன் ஓடும்போது வங்கதேச பவுலரை இடித்து தள்ளியதற்காக இந்திய கேப்டன் டோணிக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார் மேட்ச் ரெப்ஃரி.
நேற்று நடைபெற்ற வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் 25வது ஓவரில், இந்திய வீரர் டோணி, ரன் அடித்துவிட்டு மறுமுனைக்கு ஓடினார். அப்போது குறுக்கே நின்ற பவுலர் முஷ்தபிகுர் ரஹ்மானை இடித்துவிட்டார்.

பலசாலியான டோணி இடித்ததாலோ என்னவோ, ரஹ்மான், காயமடைந்தார். அந்த ஓவரை கூட முழுமையாக வீசாமல் ஓய்வுக்கு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதா, தவறுதலாக நடந்ததா என்பதை மேட்ச் ரெப்ஃரியான ஜிம்பாப்வேயின் ஆன்டி பைக்ரோப்ட் ஆய்வு செய்தார். சம்பவம் பற்றி டோணி, இந்திய அணி மானேஜர் பிஸ்வாரப் டே, அணியின் இயக்குநர், ரவி சாஸ்திரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நேற்றிரவே, சம்மன் அனுப்பினார். பாதிக்கப்பட்ட பவுலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.
இதையடுத்து ரெப்ஃரி முன்னிலையில், இந்திய தரப்பில் மூவரும் ஆஜராகி, விளக்கம் கொடுத்தனர். இந்திய அணி மற்றும் டோணி தரப்பில் ஒரு வாதம் முக்கியமாக முன் வைக்கப்பட்டது. அதாவது, டோணி வேண்டும் என்றே பவுலரை இடிக்கவில்லை. அவர் தனது கையை உயர்த்தவில்லை. தோளோடு சேர்ந்துதான் கை இருந்தது. எனவே, லெவல்-2ன்கீழான தவறில் இது வராது என்று வாதிட்டனர்.
டிவி ரிப்ளேயிலும், இந்திய அணி சார்பில் கூறப்பட்டது உண்மைதான் என்பதை ரெப்ஃரி உறுதி செய்தார். ஆனால் உடலால் பிற வீரர்களுக்கு காயம் ஏற்படுத்தினாலே அது லெவல்-2ன் கீழான குற்றம்தான் என்று விதிமுறை இருப்பதால், ரெப்ஃரி அந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தார். அந்த விதிமுறையின்கீழ், போட்டி ஊதியத்தில் 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிக்கவும், ஒரு போட்டியில் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனல், ரெப்ஃரி டோணிக்கு 75 சதவீத அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அடுத்த போட்டியில் டோணி ஆடுவதற்கு எந்த இடையூறும் இல்லை.


Click it and Unblock the Notifications