மும்பை: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்காதது தெரிய வந்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ராமருக்கு முதல் நபராக பூஜை செய்தார். அதுமட்டுமல்லாமல் ராமரின் பாதங்களில் தாமரையை வைத்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இந்த ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு பணியாளர்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேசிய அளவில் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று ஆயிரக்கணக்கானோருக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.
அதேபோல் கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, கபில் தேவ், ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக், ரவீந்திர ஜடேஜா, சவுரவ் கங்குலி, மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ஜடேஜா மற்றும் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
குறிப்பாக விராட் கோலி கலந்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அணி வீரர்கள் ஏராளமானோர் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட போது, தோனி மட்டும் அமைதி காத்தார்.
வழக்கமாக அரசியல் மற்றும் மதம் தொடர்பான விவகாரங்களில் தோனி கலந்து கொள்ள மாட்டார். அதுதான் அவரின் ஸ்டைலாக இருந்து வந்துள்ளது. ஆனால் சாதாரணமாக விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தோனி கலந்து கொள்பவர் தான். ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் கிரிக்கெட் வீரர்களை தமிழக ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வந்த நிலையில், தோனி, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.