புனே Vs மும்பை: கடைசி பந்தில் வெற்றியை ருசித்த டெண்டுல்கர் அணி!!

4-வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டியின் 13-வது நாளான நேற்று நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின.
மும்பை அணியில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அபு நெசிம் அகமது சேர்க்கப்பட்டார். புனே அணியில் காயமடைந்த ஸ்மித்துக்கு பதிலாக டிம் பெய்ன் இடம் பெற்றார்.
டாஸ் வென்ற புனே அணி முதலில் பேட் செய்தது. வலுவான புனேயின் தொடக்க பேட்டிங் வரிசையை மும்பையின் அபு நெசிமும், முனாப் பட்டேலும் சிதைத்தனர். தொடக்க வீரர்கள் ரைடர் (12), மிதுன் மன்ஹாஸ் (0) இருவரும் அபு நெசிம் பந்து வீச்சுக்கு மடிய, முனாப் பட்டேலின் அடுத்த ஓவரில் டிம் பெய்னும் (2 ரன்), கேப்டன் யுவராஜ்சிங்கும் (0) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
17 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த புனே அணியை சரிவில் இருந்து மீட்க உத்தப்பா போராடினார். அவர் 45 ரன்களில் ஆட்டம் இழந்தார். 17.2 ஓவர்களில் புனே அணி 118 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மும்பை தரப்பில் முனாப்பட்டேல் 3 விக்கெட்டுகளும், முர்டசா, மலிங்கா, அபு நெசிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
முதல் முறையாக தெண்டுல்கர் அவுட்
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியாலும் எளிதாக ரன்களை குவிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிராங்ளின் 6 ரன்கள் வெளியேறியதும், 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் சச்சின் தெண்டுல்கரும், அம்பத்தி ராயுடும் ஜோடி சேர்ந்தனர். பவுண்டரி, சிக்சர் பற்றி நினைக்காமல் ஒன்று, இரண்டு வீதம் எடுப்பதில் கவனம் செலுத்தி ஆடினார்கள்.
அணியின் ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது, தெண்டுல்கர் 35 ரன்களில் (39 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். இந்த ஐ.பி.எல்.-ல் 4-வது ஆட்டத்தில் ஆடிய தெண்டுல்கர் ஆட்டம் இழந்தது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஓவரில் அம்பத்தி ராயுடுவும் (37 ரன், 40 பந்து, 4 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி அவுட் ஆனதும், மும்பை அணிக்கு லேசான நெருக்கடி ஏற்பட்டது.
இதன் பின்னர் ரோகித் ஷர்மாவும், சைமண்ட்சும் கை கோர்த்தனர். இலக்கை நோக்கி அணி முன்னேறிய சமயத்தில், ஓவர்களும் முடிவை நெருங்கின. இறுதி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் வீசினார். இதிலும் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறிய மும்பை பேட்ஸ்மேன்கள் ஓடி ஓடி ஒவ்வொரு ரன்களாக எடுத்தனர். முதல் 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ஆட்டம் சமன் ஆனது.
கடைசி பந்தில் மும்பை அணியின் வெற்றிக்கு ஒரு தேவைப்பட்டது. அந்த ரன்னை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு போக வியூகம் வகுத்தார் யுவராஜ் சிங்.
ஆனால் கடைசி பந்தில், ரோகித் ஷர்மா ஒரு சிக்சர் அடித்து மும்பைக்கு வெற்றி தேடித் தந்தார்.
மும்பை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிலிங்கான வெற்றியை பெற்றது. முனாப் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
4-வது ஆட்டங்களில் ஆடிய மும்பை அணிக்கு இது 3-வது வெற்றி. புனே சந்தித்துள்ள 2-வது தோல்வி இது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications