மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 31 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதையடுத்து கடினமாக இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் - சாஹா கூட்டணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் சாஹா 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் அணியை கரை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 6 ரன்களில் ஆகாஷ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் விஜய் சங்கர் அதிரடியால் குஜராத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 48 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ரோகித் சர்மா ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். பியூஷ் சாவ்லா வீசிய முதல் பந்தில் விஜய் சங்கர் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் அபினவ் மனோகர் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் குஜராத் அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது.
இந்த நிலையில் குஜராத் அணியின் ஃபினிஷர்களான டேவிட் மில்லர் - ராகுல் டிவாட்டியா சேர்ந்தனர். இதில் டேவிட் மில்லர் அவ்வப்போது சில பவுண்டரிகளை, அவ்வப்போது சில சிக்சர்களையும் விளாசினார். ஆனால் இளம் வீரர் ஆகாஷ் மத்வால் வீசிய பந்தில் மில்லர் 41 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ராகுல் டிவாட்டியாவும் 14 ரன்களில் வெளியேறினார். இதனால் கிட்டத்தட்ட மும்பை அணியின் வெற்றி உறுதியானது. இதன் பின்னர் ரஷித் கான் - அல்ஜாரி ஜோசப் கூட்டணி களத்தில் இருந்தது.
13.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாறிய நிலையில், ரஷித் கான் அடுத்தடுத்து 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். அதேபோல் ஜோர்டன் 17வது ஓவரில் 15 ரன்கள் விளாசி அசத்தினார். பின்னர் 18வது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து, ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை ரஷித் கான் பதிவு செய்தார்.
இதையடுத்து அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய அவரால் குஜராத் அணியின் நெட் ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டார். கடைசி ஓவரில் 3 சிக்சர்களை ரஷித் கான், இறுதிவரை களத்தில் இருந்து 31 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 191 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது. இதன் மூலம் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட ந்மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறலாம். இதனால் 10 புள்ளிகளுடன் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.