வியாபாரம் ஆரம்பம்
இந்த முதல் வியாபாரத்தில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தென்னாபிரிக்காவின் க்விண்டன் டி காக்கை, அவரது 2018 ஏல மதிப்பான 2.8 கோடிக்கே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
இரு வீரர்கள் விடுவிப்பு
இந்த மதிப்பை ஈடுகட்ட தங்கள் அணியில் இருந்த இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது. இவர்களது மதிப்பு 50 லட்சம் (அகிலா தனஞ்ஜெயா) மற்றும் 2.2 கோடி (முஸ்தாபிசூர் ரஹ்மான்) ஆகும்.
க்விண்டன் டி காக்கை வாங்கியது ஏன்?
க்விண்டன் டி காக் தென்னாபிரிக்காவை சேர்ந்த வீரர். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். துவக்க வீரராகவும் சிறப்பாக செயல்படக் கூடியவர் டி காக். மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். எனவே, டி காக் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
2019 ஐபிஎல் இந்தியாவில் நடக்குமா?
2019 ஐபிஎல் இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கிறது. அதற்கு காரணம், இந்திய பாராளுமன்ற தேர்தல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் தான் நடைபெறும். இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் வீரர்கள் தேர்வு, அணித் திட்டம் ஆகியவற்றில் பொறுமையாக இருந்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் மட்டுமே ஒரு வீரரை வாங்கியுள்ளது. பெங்களூர் அணி டி காக்கை விடுவித்துள்ளது. வேறு எந்த வீரரையும் வாங்கவில்லை.