IPL 2026: ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மட்டுமில்லை.. அணியில் இருந்தே நீக்க மும்பை இந்தியன்ஸ் திட்டம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்வியைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து அணி நிர்வாகம் நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் பதவி மட்டுமின்றி, அவர் அணியில் இருந்தே நீக்கப்படலாம் என்ற செய்தியும் கசிந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. இதற்கு முன்னதாக 2024 சீசனிலும் பாண்டியா தலைமையில் மும்பை அணி கடைசி இடத்தையே பிடித்திருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து பெரும் எதிர்பார்ப்புடன் மும்பை அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு, தலைமைப் பொறுப்பு சரியாக அமையவில்லை. ஒரு வெற்றிகரமான அணியாகக் கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நிர்வாகத்துடன் மோதல்?
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே சரியான புரிதல் இல்லை எனத் தெரிகிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பயிற்சியாளர் குழு வழங்கிய ஆலோசனைகளையும், தரவுகள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் பாண்டியா மற்றும் சில மூத்த வீரர்கள் சரிவரப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அணியை வழிநடத்தும் விதத்தில் நிர்வாகத்திற்கு அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதை மூன்று வெவ்வேறு தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கேப்டன் பதவியை இழந்த பிறகு, ஹர்திக் பாண்டியா ஒரு சாதாரண வீரராக அணியில் நீடிப்பாரா அல்லது முழுமையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தே விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவர் அணியில் நீடிக்க வேண்டுமானால், அவர் ஒரு ஆல் ரவுண்டராக சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆனால், அவரது தற்போதைய ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஹர்திக் பாண்டியா செயல்பாடு
இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா, 22.89 சராசரியுடன் வெறும் 206 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.26 ஆக உள்ளது. பந்துவீச்சிலும் அவர் சோபிக்கவில்லை. 23 ஓவர்கள் வீசி வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள அவரது எகானமி ரேட் 11.43 ஆக உள்ளது. பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் போன்ற அணிகள் பவர் பிளே ஓவர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய நிலையில், மும்பை அணி அந்த இடத்தில் பின்தங்கியுள்ளது.
ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்ததில் இருந்தே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். 2024 சீசனின் போது மைதானத்தில் அவர் கேலி செய்யப்பட்டார். 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியின் மூலம் அந்தப் பிம்பத்தை மாற்ற முயன்றாலும், இந்த ஐபிஎல் தோல்வி மீண்டும் அவரை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. வரும் நாட்களில் மும்பை இந்தியன்ஸ் அணி இது குறித்த முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
