IPL 2026: சேப்பாக்கத்தில் உலக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. டி20 வரலாற்றில் மாபெரும் மைல்கல்
சென்னை: டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் செய்யாத ஒரு மாபெரும் உலக சாதனையை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து அரங்கேற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 50000 ரன்களை கடந்த உலகின் முதல் அணி என்ற புதிய சரித்திரத்தை எழுதி முத்திரையை பதித்துள்ளது. இந்த போட்டியில் வெறும் 114 ரன்கள் எடுத்தால் இந்த இமாலய சாதனையை எட்டலாம் என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி, ஆட்டத்தின் 15வது ஓவரில் இந்த பிரம்மாண்ட மைல்கல்லை தொட்டு வரலாறு படைத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது 308வது டி20 போட்டியில் விளையாடி இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் 286 ஐபிஎல் போட்டிகளும், 22 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளும் அடங்கும். மும்பை அணி இதுவரை குவித்துள்ள இந்த 50000 ரன்களில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி நாயகனுமான ரோஹித் சர்மாவின் பங்களிப்பு தான் மிக அதிகம். அவர் இதுவரை 240 போட்டிகளில் விளையாடி 6286 ரன்களை குவித்து முதலிடத்தில் கம்பீரமாக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் 3933 ரன்களுடனும், கீரன் பொல்லார்ட் 3915 ரன்களுடனும் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களாக வலம் வருகின்றனர்.
உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஒட்டுமொத்த அணிகளின் பட்டியலில், மும்பைக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் சோமர்செட் அணி 303 போட்டிகளில் 48244 ரன்களுடன் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 295 போட்டிகளில் 47304 ரன்களுடன் 3வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 286 போட்டிகளில் 46438 ரன்களுடன் 4வது இடத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த பிரம்மாண்ட வரலாற்று உலக சாதனை மும்பை இனியன்ஸ்இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும், நடப்பு தொடரில் மும்பை அணிக்கு இது ஒரு வாழ்வா சாவா போட்டியாகும். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள அனைத்து போட்டிகளில் மும்பை அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
ஒருவேளை இந்த ஆட்டத்தில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியிடம் தோல்வியை தழுவினால், அந்த அணியால் லீக் சுற்றின் முடிவில் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். 14 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
