மும்பை: ஐபிஎல் தொடரின் வலிமையான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியில், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இடையே மோதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு அந்த அணி நிர்வாகம் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஒரு தகவல் பரவியது.
அதில், "ரோஹித் சர்மா இந்த சீசனில் சிறப்பாகச் செயல்படாவிட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார் என்றும், கடந்த பல ஆண்டுகளாக ரோஹித்தின் மோசமான ஸ்டிரைக் ரேட் மற்றும் ரன் குவிப்பு குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது" என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "எதையாவது உளற வேண்டியது" என அந்த நபரை கிண்டல் செய்து பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக, ஐந்து முறை கோப்பையை வென்றுகொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது இந்த திடீர் முடிவு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரோஹித் சர்மாவை கேப்டனாக நீக்கியதை எதிர்த்து மைதானங்களில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
பல போட்டிகளில் கேப்டன்சியை மாற்றியது தவறு என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டனர். இந்த கேப்டன்சி மாற்றம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒற்றுமையைப் பாதித்துள்ளதாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்கள் பேசி வருகின்றன. மும்பை அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த சீசனில் பிளே-ஆஃப் வரை முன்னேறியும், குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது ஐபிஎல் 2026 தொடரை எதிர்நோக்கியுள்ள மும்பை அணி, தனது முதல் போட்டியில் மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இத்தகைய வதந்திகள் அணியின் இலக்கை சிதைக்கும் விதமாக அமைந்தாலும், அணி நிர்வாகத்தின் இந்த அதிரடி பதில் ரசிகர்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
