மும்பை இந்தியன்ஸ் அணியில் மெகா ட்விஸ்ட்.. அடுத்த கேப்டனை முடிவு செய்யப் போவதே ரோஹித் சர்மாதான்
மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, போட்டிகளில் இம்பாக்ட் வீரராக ஓரங்கட்டப்பட்ட ரோஹித் சர்மா தற்போது அந்த அணியின் அடுத்த கேப்டனைத் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை வேறு அணிகளுக்கு வர்த்தகம் செய்ய அணி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால், 2027 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பு இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடரவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோஹித் சர்மா விரும்பவில்லை.

இதை அடுத்து, புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனுக்கான பந்தயத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இளம் வீரர் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், திலக் வர்மாவிற்கே கேப்டனாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, ஹர்திக் பாண்டியாவை டிரேடு செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மும்பை பேச்சுவார்த்தை நடத்தியது. கொல்கத்தா அணி கேமரூன் கிரீனை வழங்க முன்வந்த போதும், அவரது பணிச்சுமை காரணமாக மும்பை இந்தியன்ஸ் அதை ஏற்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நடந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நின்று போயுள்ளது. சிஎஸ்கே அணி புதியபயிற்சியாளரை நியமித்த உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இதற்கிடையே, கடந்த 2026 சீசனில் சொதப்பிய போதிலும், 35 வயதான சூர்யகுமார் யாதவை அணியிலேயே தக்கவைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனேவும் தனது பதவியில் நீடிப்பார் என அந்த அணி வட்டாரம் உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications

