கொழும்பு: இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் குட்டி ஏபி டி வில்லியர்ஸ் என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் 71 பந்துகளுக்கு 98 ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா ஏ அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துனிட்ய்ஹ் 76 ரன்கல் விளாசினார்.

இதையடுத்து 265 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஏ அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. இந்த நிலையில் குட்டி ஏபி டி வில்லியர்ஸ் என்ற பார்க்கப்படும் இளம் வீரரான டிவால்ட் பிரெவிஸ் களமிறங்கினார். அப்போது, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பிரெவிஸ், 71 பந்துகளில் 98 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
இதனையறிந்த மும்பை அணியின் ரசிகர்கள் டிவால்ட் பிரெவிஸை பயன்படுத்தாத மும்பை அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் டிவால்ட் பிரெவிஸை ஒரு போட்டியில் கூட மும்பை அணி பயன்படுத்தவில்லை. டிரிஸ்டன் ஸ்டம்ப்ஸ்-க்கு கூட சில போட்டிகளில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்தார். ஆனால் பிரெவிஸ் பக்கம் கடைசி வரை மும்பை அணியின் கண்கள் திரும்பவே இல்லை. இதற்கு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.