அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 8 "அவே" போட்டிகளில் விளையாடி வெறும் 177 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் பீதி அடைந்துள்ளனர்.
அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. குஜராத் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எவ்வளவு எளிதல்ல என்றாலும், மும்பை அணியின் வலிமையான பேட்டிங் வரிசை எதுவும் சாத்தியம் என்ற வகையில் விளையாடி வருகிறது. இதனால் மும்பை அணிக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் மிகவும் முக்கியமானவர் சூர்யகுமார் யாதவ். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 544 ரன்களை குவித்துள்ளார். மும்பை அணிக்காக அசாத்தியமான இன்னிங்ஸ்களை விளையாடி, வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்த சீசனை மோசமாக தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸ் மிரள வைத்தது.
இந்த நிலையில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வான்கடே மைதானத்தில் மிரட்டி வரும் சூர்யகுமார் யாதவ், அவே போட்டிகளில் மோசமான இன்னிங்ஸ் ஆடி வருகிறார். நடப்பு சீசனில் 8 அவே போட்டிகளில் விளையாடி வெறும் 177 ரன்களை மட்டுமே சூர்யகுமார் எடுத்துள்ளார். ஆனால் வான்கடே மைதானத்தில் 367 ரன்களை விளாசி இருக்கிறார்.
இதனால் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள குவாலிஃபையர் 2வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அணி பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ள சூர்யகுமார் யாதவ் சொதப்பினால், மும்பை அணிக்கு தோல்வியடைவது நிச்சயம் என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சூர்யகுமார் யாதவ் இல்லையென்றால் திலக் வர்மா மட்டுமே நம்பிக்கையுடன் ஆடி வருகிறார். இதனால் ஸ்கையின் ஆட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.