
மும்பை vs ஹைதராபாத்
ஐபிஎல் 2021 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. இன்றோடு அனைத்து லீக் ஆட்டங்களும் நிறைவடைகின்றது. இன்று நடைபெறும் 2 ஆட்டமும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோதுகின்றன.

இரண்டு அணிகள் மீதம்
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. பிளே ஆப் சுற்றில் நுழைய 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. நேற்றைய போட்டி முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. போட்டியில் மீதமிருப்பது கொல்கத்தாவும், மும்பையும் தான்.

மிக அதிகமான வாய்ப்பு
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது.14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது. ஏற்கனவே ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருந்த கொல்கத்தா அணி ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தது. இதனால் அந்த அணி மிகவும் சிறப்பான நிலையை அடைந்தது. எனவே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றில் நுழைய மிக மிக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

வாய்ப்பு இல்லை
நடப்பு சாம்பியனான மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை. 12 புள்ளியுடன் 6 வது இடத்தில் உள்ள அந்த அணி ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதாவது முதலில் பேட் செய்து மும்பை 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதே நேரத்தில் பந்துவீச்சில் ஐதராபாத்தை 80 ரன்களில் சுருட்ட வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால் நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஏதாவது அதிசயம், அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை வாய்ப்பை பெற முடியும்.

மிகப்பெரிய மாற்றங்கள்
இந்நிலையில், மும்பை அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதில், மும்பை அணியில் 2 மிகப்பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. மும்பை அணியில், ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கைரன் பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, நாதன் கோல்டர் நைல், ஜெயந்த் யாதவ், ஐஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குயின்டன் டி காக் மற்றும் க்ருனால் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications