மும்பை: ரோஹித் சர்மா 2025 ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். இது குறித்துப் பேசிய முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல், "வேறு வீரராக இருந்திருந்தால் இந்நேரம் அணியை விட்டு நீக்கப்பட்டிருப்பார். ரோஹித் சர்மா புகழ்பெற்ற வீரர் என்பதால்தான் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார்" என விமர்சனம் செய்திருக்கிறார்.
அதே சமயம், ரோஹித் சர்மா என்ற தலைவர் அணியை ஒருங்கிணைத்துச் சென்றதால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை வென்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் (2025), ரோஹித் சர்மா இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி 82 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி வெறும் 13.6 ஆக உள்ளது. கடந்த ஓராண்டாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
இது குறித்துப் பேசிய சைமன் டவுல், "ரோஹித் சர்மாவின் இந்த ஆண்டு ஐபிஎல் புள்ளி விவரங்கள் வேறு ஒரு வீரருக்கு இருந்திருந்தால், அவர் இந்நேரம் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் நல்ல புள்ளி விவரங்களைக் கொண்டிருந்தும், பலமுறை பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. எனவே, அவர் ரோஹித் சர்மாவாக இல்லை என்றால், பிளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்காது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனினும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ரோஹித் சர்மா தனது ஃபார்மை மீட்டு, மீதமுள்ள போட்டிகளில் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ரோஹித் தொடர்ந்து விளையாட முடியும். ஒருவேளை அணி தொடர்ந்து வெற்றி பெறவில்லை, ரோஹித் சர்மாவும் சரியாக விளையாடவில்லை என்றால், அது பெரிய பிரச்சினையாக மாறும்."
"ரோஹித் சர்மா மிகவும் திறமையான வீரர். அவர் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவார், இந்தியாவுக்காக என்னென்ன சாதனைகள் செய்துள்ளார் என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரியும். அவரை விட சிறந்த ஐபிஎல் ஆட்டத்தை ஆடிய வீரர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு தலைவராகப் பார்க்கும்போது, அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ரோஹித் தான் ஒரு பசை போல இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருங்கிணைத்து, ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்" என்றும் சைமன் டவுல் கூறினார்.