மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கடும் வெறியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்காக அவர்கள் ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவையே, நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சரிசமமாக இருக்கும். சூரிய குமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்.

தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் இடத்தை சூரியகுமார் வகித்து வருகிறார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து விலகிய சூரியகுமார் யாதவ் இதற்காக ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூரியகுமார் பயிற்சி செய்து வருகிறார்.
உடல் தகுதியை மீட்கும் பணியில் அவர் இரவு பகலாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவை சோதித்த மருத்துவர்கள், இன்னும் அவர் 100 சதவீதம் உடல் தகுதியை எட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் டி20 உலக கோப்பை ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தொடங்க உள்ளதால் அவரை அவசரப்பட்டு தற்போது களமிறக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் சூரியகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சூரியகுமார் யாதவ், தன்னுடைய இதயம் நொறுங்கியது போன்ற ஒரு எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்க்கும்போது சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகிறது.
ஐபிஎல் தொடரை விட டி20 உலக கோப்பை மிகவும் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை என்றால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும்.