
வென்றுக் காட்டிய மும்பை
இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தொடர் தோல்விகளாக துவண்டு போயிருந்த மும்பை அணி, நிச்சயம் பிளே ஆஃப் வராது என்று பலரும் ஆருடம் கூறியிருந்தனர். ஆனால், நேற்று ராஜஸ்தான் அணியை புரட்டி எடுத்த மும்பை, பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் கெட்டியமாக உறுதி செய்துள்ளது. நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்களே எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணியில், ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே பந்துகளை விளாச தொடங்கினார். ஏனெனில், 10 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், ரன்ரேட், -0.11 என்று அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள இந்த போட்டியை மும்பை பயன்படுத்த நினைத்தது. இதனால், அதிரடி காட்டிய ரோஹித் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடங்கும். பிறகு, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் கேட்ச்சாக, 56 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை. எனினும், மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன், நேற்று பந்துகளை விளாசித் தள்ள, 8.2வது ஓவரிலே 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் விளாசி அட்டகாசமாக விளையாடினார். இந்த அபார வெற்றியின் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. காரணம், இப்போது அவர்களது ரன் ரேட் -0.048.

வெற்று ஐபிஎல்
மும்பை இந்தளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நிச்சயம் எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும், ரன் ரேட்டை அதிகமாக்கி ஜெயித்தது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எப்படி புறக்கணிக்க முடியாதோ, அது போன்று தான் மும்பையும். இந்த மஞ்சளையும், நீலத்தையும் நீக்கிவிட்டு பாருங்கள்.. ஐபிஎல் தொடர் ஒரு வெற்றுத்தொடராகவே தெரியும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மும்பை அவ்ளோ தான்
குறிப்பாக, இந்த 2021 தொடரில், மும்பை அணி தொடக்கத்தில் இருந்தே சரியாக விளையாடாத நிலையில், தொடர்ச்சியான தோல்வி காரணமாக தொடரில் இருந்து வெளியேறும் இக்கட்டான சூழலில் இருந்தது. இப்போது, ஒரேயொரு வெற்றி, அந்த அணியின் அனைத்து யூகங்களை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த 2014ம் ஆண்டும், இதே போன்று இரு இக்கட்டான நிலையில் தான் மும்பை அணி இருந்தது. அத்தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் மும்பை வரிசையாக தோற்றது. அதாவது 5 போட்டிகளில் விளையாடி 0 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. மும்பை அவ்ளோ தான் என்று அனைவரும் சூளுரைத்தனர்.

காத்திருக்கும் புயல்
ஆனால், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி மீண்டு வந்து வரிசையாக போட்டிகளை வென்றது. அனைத்து அணிகளையும் போட்டுத்தாக்கியது. அந்த 5 தோல்விகளுக்கு பிறகு 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் நான்காவது அணியாக பிளே ஆஃப் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆச்சர்யம் என்பது சாதாரண வார்த்தை தான். பிரமிக்க வைத்தது எனலாம். இப்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் அப்படியொரு இக்கட்டான சிக்கலில் மும்பை நிற்கிறது. இம்முறையும் மீண்டு வருவோம் என்பது போல், ராஜஸ்தானை துவம்சம் செய்து, அடுத்த போட்டிக்காக அமைதியாக காத்திருக்கிறது இந்த புயல்.


Click it and Unblock the Notifications