மும்பை: குஜராத் அணியின் பலமான பந்துவீச்சை எதிர்த்து மும்பை பேட்ஸ்மேன்கள் சமாளிப்பார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட உள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் ஆணி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இருப்பினும் முதல் இரு இடங்களில் நிறைவு செய்ய குஜராத் அணிக்கு மேலும் சில வெற்றிகள் தேவையாக உள்ளது.
அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றால் மும்பை அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உருவாகும். ஆனால் அந்த அணியின் நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அனைத்து போட்டிகளில் வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குஜராத் அணியை பொறுத்தவரை திட்டமிடுதலிலும், அதனை செயல்படுத்துவதிலும் வீரர்கள் குறியாக இருக்கிறார்கள். அதேபோல் ஆட்டம் திசை மாறி போகும் போது உடனடியாக விழித்துக் கொள்ளும் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். ஷமி, ரஷித் கான், நூர் அஹ்மத், மோகித் சர்மா என்று பந்துவீச்சாளர்கள் பட்டாசாக செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல் சுப்மன் கில், சாஹா, ஹர்திக், அபினவ் மனோகர், மில்லர், டிவாட்டியா என்று எந்த அணிக்கும் சவாலளிக்கும் வரிசையை குஜராத் அணி கொண்டுள்ளது.
அதேபோல் மும்பை அணியை பொறுத்தவரை சூர்யகுமார், இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், நேஹல் வதேரா உள்ளிட்டோர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா கடந்த 5 போட்டிகளில் வெறும் 12 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மாவின் பேட்டிங் சொதப்பல் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது. இதனை இன்றைப் போட்டியில் ரோகித் சர்மா மாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் மும்பை அணி பந்துவீச்சில் பெஹ்ரண்டார்ஃப் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் மட்டுமே நம்பிக்கையளித்து வருகிறார்கள்.
ஆனால் ஜோர்டன், குமார் கார்த்திக்கேயா உள்ளிட்டோரின் பந்துவீச்ச் எதிரணிகளுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அதேபோல் மும்பை அணி பந்துவீச்சாளர்கள் எந்த மைதானத்தில் பந்துவீசினாலும் மிக எளிதாக 200 ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார்கள். இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள இன்றைய ஆட்டமும் ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்பது உறுதி. ஆனால் குஜராத் பந்துவீச்சை எப்படி மும்பை பேட்ஸ்மேன்கள் சமாளிக்க போகிறார்கள் என்பதே கேள்வியாக உள்ளது.