சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி குவாலிஃபையர் 2ல் விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ஆடும். அதே வேளையில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். நடப்பு சீசனில் மோசமான பவுலிங் அட்டாக்கை வைத்துக் கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி மும்பை அணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு மும்பை அணியின் பேட்ஸ்மேன்களே முழுமையான காரணம். சூர்யகுமார் யாதவின் எழுச்சி அந்த அணிக்கு எதிர்பார்க்காத வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
இன்னொரு முக்கியக் காரணம் ரோகித் சர்மா டாஸை வெல்வதுதான். எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் மும்பை அணி அசால்ட்டாக சேஸிங் செய்து வருகிறது. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணி டாஸ் வென்றால், என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணி ஆடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் மும்பை அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறினாலும், க்ருனால் பாண்டியா தலைமையில் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மேட்ச் வின்னரை லக்னோ அணி உருவாக்குவதால், எந்த வீரர் எப்படி, எந்த நேரத்தில் விளையாடுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை ஒப்பிடும் போது லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சு அபாரமாக உள்ளது. க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா என்று அபாயகரமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் மும்பை அணியோ முழுக்க முழுக்க பியூஷ் சாவ்லாவின் சுழலை மட்டும் நம்பியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சுழல் மற்றும் பவர் பிளே வெற்றிபெறுபவர்களே, போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதால் லக்னோ அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் சென்னை அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், மும்பை அணி இறுதிப்போட்டிக்கு வர வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களே ஆவலாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதினால் எப்படி இருக்கும் என்று கற்பனையை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு மும்பை அணிக்கு இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.