மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியுடன் பயணிக்க உள்ள நெட் பவுலர்கள் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் உம்ரான் மாலிக், குல்தீப் சென், முகேஷ் குமார் மற்றும் சைனி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் ரஹானேவுக்கு அதிகமாக உள்ளதால், அவரின் அனுபவத்தை நிச்சயம் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து அதிகமாக சுழல் இருக்காது என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக சிறந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியுடன் பயணிக்க உள்ள நெட் பவுலர்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அதிவேகத்தில் பந்துவீசக் கூடிய உம்ரான் மாலிக், சிறந்த யார்க்கர் பந்துகளை வீசும் முகேஷ் குமார், ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் குல்தீப் சென் மற்றும் இந்திய டெஸ்ட் அணிக்காக ஆடியுள்ள நவ்தீப் சைனி ஆகியோர் நெட் பவுலர்களாக பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.