மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது இன்னும் நம்ப முடியாத நிகழ்வாக உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானை வீழ்த்தி "பிளேஆப்" சுற்றுக்கு நுழைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியபோது, "இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனது இதயதுடிப்பே நின்று விடும் வகையில் இருந்தது. முடியாதது என்று எதுவுமில்லை. இது மாதிரியான ஒரு அதிரடியான ஆட்டம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் அதிரடியாக இருந்தது. அம்பதி ராயுடு, ஆதித்யா தாரே ஆகியோரும் இந்த நம்ப முடியாத வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்" என்று தெரிவித்தார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆண்டர்சன் கூறும் போது, "அம்பட்டி ராயுடு என்னுடன் இணைந்து நன்றாக ஆடினார். கடைசி பந்தில் ஆதித்யா தாரே சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
மும்பை ரசிகர்களின் ஆதரவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. எனது சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருந்தது" என்றார்.