காயத்தால் பாதிப்பு
2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய டி.நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் தனது திறமையை நிரூபித்தார். இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என்று பலரும் கூறி வந்த நிலையில் திடீரென முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் 2 போட்டிகளுடன் வெளியேறினார். பின்னர் அறுவைசிகிச்சை செய்துகொண்ட நடராஜன், நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.
மீண்டும் பயிற்சி
தற்போது அவர், பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தன்னுடைய பயிற்சிகளை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவர் பேசியுள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் நன்றாக செயல்படுகிறேன். மெதுவாக எனது பயிற்சியை தொடங்கியுள்ளேன். இந்த மாத இறுதிக்குள் முழு வேகத்தில் பந்துவீச எதிர்நோக்கியுள்ளேன்.
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது எனக்கு வரமாக மாறிவிட்டது. ஆனால் அது எனது கையில் எதுவும் இல்லை. எனவே தற்போதைக்கு எனது கவனம் முழுக்க ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதற்குள் உடல்நிலை முழுவதுமாக குணமடைந்துவிட வேண்டும் என்பதில் தான் உள்ளது.
நம்பிக்கை
டி20 உலகக்கோப்பை குறித்து பேசிய அவர், நான் தற்போதைய சூழலுக்கு டி20 உலகக்கோப்பை குறித்து சிந்திக்கவில்லை. நான் முதலில் பூரண குணமடைய வேண்டும். நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக்கோப்பைக்கான வாய்ப்பு தானாக தேடி வரும். அதனை நான் நம்புகிறேன். எனவே உடற்தகுதியை மேம்படுத்தவேண்டும்.