மொஹாலி: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் நட்சத்திர பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் வரலாற்றிலேயே பஞ்சாப் அணியின் மோசமான பந்துவீச்சை வீசி சாதனை படைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அர்ஷ்தீப் சிங் அபாரமாக பந்துவீசினார். குறிப்பாக திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோரை ஸ்டம்புகளை சிதறடித்து போல்டாக்கினார்.

அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஸ்டம்புகள் சிதறிய புகைப்படம் மும்பை அணி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 215 ரன்கள் என்ற அபார இலக்கை விரட்டி சாதனை படைத்துள்ளது. மும்பை அணியின் பேட்டிங்கின் போது அர்ஷ்தீப் சிங்கை திட்டமிட்டு மும்பை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர்.
குறிப்பாக கடைசி நேரத்தில் வந்த திலக் வர்மா அர்ஷ்தீப் சிங்கை எதிர்கொண்ட 8 பந்துகளில் மட்டும் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டர் என்று 24 ரன்களை விளாசினார். கடைசியாக அடித்த சிக்சர் 102 மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தது. இதனால் அர்ஷ்தீப் சிங் ஏற்படுத்திய வலிக்கு, மும்பை அணி பதிலடி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மோசமான பந்துவீச்சை வீசி சாதனை படைத்துள்ளார்.
3.5 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி 66 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அவரின் எகனாமி மட்டும் 17.22ஆக இருந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 3.5 ஓவர்களில் 66 ரன்களை விட்டுக் கொடுத்த முதல் பஞ்சாப் வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.